டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? என லட்சக்கணக்கான தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இதன் அப்டேட் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சமீபமாக குரூப் 2 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.
2022 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் மேல் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் பரவலாகியுள்ளது.
7301 குரூப் 4 நிலை காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை மாதம் 24ம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கிட்டத்தட்ட 14 லட்சம் பேர் தேர்வில் கலந்து கொண்டனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிகளுக்கு, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, வாய்மொழித் தேர்வு என எதுவும் இல்லாமல் நேரடி நியமன எழுத்துத் தேர்வின் மூலமே இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. எனவே, தேர்வர்கள் தங்களது உழைப்புகளை, திறமைகளை ஒட்டுமொத்தமாக இந்த தேர்வில் செலுத்தியிருக்கின்றனர்.
இத்தகைய தேர்வர்களின் நலனில் அக்கறை கொண்டு தான், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தேர்வு கால அட்டவணை(Annual Calendar ), தேர்வு முடிவுகள் (TNPSC Result declaration schedule)குறித்த அட்டவணையை வெளியிடும் நடைமுறையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் சமீப காலமாக வெளியிட்டு வருகிறது.தேர்வு முடிவின் அடிப்படையில் தான், அடுத்த தேர்வுக்கு எப்போது இருந்து தயாராக வேண்டும், தனியார் அலுவல் பணிக்கும்/ தேர்வு தயாரிப்பிக்கும் உள்ள இடைவெளியை எந்தளவு அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர் போட்டித்தேர்வர்கள்.
கடந்த நவம்பர் மாதம் 15ம் தேதி, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட தேர்வு முடிவுகள் கால அட்டவணையில், டிசம்பர் மாதத்திற்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இம்மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.